Thursday 18 June 2015

உங்கள் உறக்கம் சரிதானா?

''கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
 தூக்கம் கண்ணைச் சொக்குமே
அது அந்தக் காலமே...
மெத்தை விரித்தும் சுத்தப் பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே...
அது இந்தக் காலமே...''
- இன்று பலருக்கும் 'இரவு’ கனவாகிவிட்ட நிலையில் பொருத்தமான பாடல் இது. நிம்மதியான தூக்கத்தைப் பெறத் தேவை, சூழல் மட்டும் அல்ல... நாம் அன்றாடம் படுத்து உறங்கும் படுக்கைவிரிப்பும்தான். கட்டாந்தரையில் படுத்த காலம் போய், ஈஸி சேர், கட்டில், மெத்தை, வாட்டர்பெட் என சொகுசாகப் படுக்கைகள் வந்தாலும், தூக்கம் மட்டும் வருவதில்லை.
''உடைக்கும் உடலுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் படுக்கைக்குக் கொடுக்காததால்தான், தூக்கம் பலருக்கு இன்னும் ஏக்கமாகவே இருக்கிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் உமா, நம் உடலுக்கு எந்த மாதிரியான படுக்கை நல்லது என்பதைப் பற்றி விளக்கமாகச் சொன்னார்.
கட்டில்: இரும்பினால் செய்த கட்டில் காலத்துக்கு ஏற்றவாறு மாறக்கூடிய தன்மை கொண்டது. வெயில் காலத்தில், உஷ்ணத்தன்மையும், குளிர் காலத்தில் அதிகமான குளிர்ச்சியையும் தரும். உடலில் உஷ்ணம் அதிகமாகும்போது, வியர்க்குரு, கட்டிகள், அம்மை போன்றவை ஏற்படலாம். அதிகக் குளிர்ச்சி ஏற்படும்போது உடம்பு விறைத்துப்போய், காய்ச்சல் வரவும் வாய்ப்பு உண்டு. எந்த வயதினருக்கும், எல்லாக் காலத்திற்கும் ஏற்றது, எட்டி மரம், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மரக் கட்டில்கள்தான். மரக்கட்டிலில் படுக்கையில் சமதளமாக இருப்பது இதன் சிறப்பு.
பாய்: மூங்கில் பாய் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். உடலின் குளிர்ச்சியை அதிகப்படுத்தக்கூடியது பிரம்புப் பாய். ஆடம்பரத்துக்காக உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பாய் எனப் புதிது புதிதாகப் பாய்கள் வந்தாலும், கோரைப் புற்களால் செய்யப்பட்ட கோரைப் பாய் உடலுக்கு மிகவும் ஏற்றது. மிதமான குளிர்ச்சியையும், வெப்பத்தையும் தரக்கூடியது. மிக அரிதாகக் கிடைக்கக்கூடிய தாழம்பூப் பாய் உடலின் பித்தத்தைக் குறைக்கும். இதில் இருந்து வீசும் நறுமணம், உடலையும் மனதையும் ரம்மியமான உறக்கத்தில் ஆழ்த்தும்.'' என்றார்.
இந்த நவீன உலகத்திற்கு ஏற்றவாறு எந்த மாதிரி படுக்கைகளைத் தேர்ந்தெடுத்துப் படுக்க வேண்டும், எந்தப் பொசிஸனில் படுக்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்குப் பளிச் பதில் அளித்தார் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் திருமாவளவன்.
மெத்தை: கட்டிலானது சமமானதாக மரத்தால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதன் மீது விரிக்கும் மெத்தையானது எறியப்பட்ட பந்தை போன்று பௌன்ஸ் ஆகாமல், முக்கால்வாசி தடிமனாக இருக்க வேண்டும். அடிக்கடி வளையக்கூடிய கட்டிலில் படுத்தால் கண்டிப்பாக முதுகு வலி, கழுத்து வலி வரும். அதுவும், முதியவர்கள் நாரால் நெய்யப்பட்ட கட்டில், பிரம்பு நாற்காலி அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நவீன ஊஞ்சலைப் பயன்படுத்தினால், முதுகு வலியுடன் கழுத்து வலியும் அழையா விருந்தாளியாக வரும்.
அந்தக் காலத்தில் 'இலவம் பஞ்சில் துயில் எழு’ என்று நம் முன்னோர்கள் சொன்னதுபோல், இலவம் பஞ்சால் செய்யப்பட்ட அதிக அளவு தடிமன்கொண்ட பஞ்சு மெத்தையைப் பயன்படுத்துவது நல்லது.
தரை: விரிப்பு இல்லாமல் வெறும் தரையில் படுப்பதும் நல்லதல்ல. வாத நோய் மற்றும் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்படலாம். அதிலும், பல வீடுகளில் அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடிய டைல்ஸ்களைப் பதித்திருப்பதால், திடீர் ஜுரம், தலைவலி போன்றவை ஏற்படலாம். இலவம் பஞ்சில் மெத்தைபோல் விரிப்புகள் கிடைக்கின்றன. உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
தலையணை: நம் உடலுக்கும் தலைக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்கிறதோ, அந்த இடைவெளியை நிரப்பக்கூடிய அளவிற்குத் தலையணையின் தடிமன் இருந்தால் போதும். இதன் மூலம் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், தலை பாரம், கழுத்து வலி, நரம்புப் பிடிப்பு போன்ற பிரச்னைகள் வராது.
படுக்கும் முறை: பூமியின் வட திசையில் இருந்து தென் திசைக்குக் கதிரிழுப்பு விசை இயங்கிக்கொண்டிருக்கும். இதனால், காந்த ஈர்ப்பு சக்தி அதிகமாகி, மூளைப் பகுதியில் அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வுபெறும் தன்மை குறைந்துவிடும். எனவே வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது. கவிழ்ந்தும் படுக்கக் கூடாது. எப்போதும், இடது புறமாக ஒருக்களித்துத் தூங்குவது நல்லது. இதனால் நோய்கள் எல்லாம் விரைவில் குணமடையும்.
கர்ப்பிணிப் பெண்கள், இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய் சேய் இருவருக்கும் நல்லது.'' என்றார்.
படுக்கைகள் மட்டும் அல்ல... படுக்கும்போது நம் எண்ண அலைகளைக் கரை சேர்த்து, மிதமான இசையை ரசித்தபடி உறங்கினாலே, உற்சாகமான மனநிலையில், உறக்கமும் தன்னால் வரும்.  

No comments:

Post a Comment