Saturday 14 January 2023

நாணய சேகரிப்பு - தெரிந்து கொள்வோம்!

நாணய சேகரிப்பு - தெரிந்து கொள்வோம்!

நாணயங்கள் சேகரிப்பு போல் தபால் சேகரிப்பு, ரேடியோ சேகரிப்பு உள்ளிட்ட பல சேகரிப்புகள் உள்ளன. ஆனால், மற்ற சேகரிப்பு போல் நாணயங்கள் சேகரிப்பு கிடையாது. நாணயங்கள் சேகரிப்பை 'பொழுதாக்கத்தின் அரசன்' (King of the Hobby) என வர்ணிக்கப்படுவதும் உண்டு. நாணய சேகரிப்பு பொழுதுபோக்காகவும் இருந்து நம்முடைய கலை - இலக்கியம் சார்ந்த வரலாற்று தகவல்களை பேணி பாதுகாக்கவும் உதவுகிறது என்பதால்தான் இப்படி வர்ணிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் 'மெட்டாலிக் எவிடன்ஸ்' (Metallic evidence) என்று சொல்லக்கூடிய நாணயங்களை பாதுகாக்கவும், அழிவில் இருந்து மீட்டெடுக்கவும் இந்த நாணய சேகரிப்பு உதவுகிறது. நாட்டின் மற்ற புராதன சின்னங்களான கோவில் கோபுரங்கள், செப்பேடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் இருந்து வரலாற்று சம்பவங்களை நினைவுகூரலாம். ஆனால், ஆகச் சிறந்த வரலாற்று சான்று, உலோகச் சான்று என்றால், அது நாணயங்கள் தான். ஒரு சின்ன நாணயத்தில் ஒரு வரலாற்று சம்பவத்தின் முழு பின்னணியை தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால்,  பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி?

நாணயச் சங்கம்!

''மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். இதனால் நாணயங்கள் நாளடைவில் துரு பிடித்துவிடும். சேகரிக்கப்படும் நாணயங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். அதைவிட கடையில் விற்கப்படும் காயின் ஆல்பங்களை வாங்கி அதில் நாணயங்களைப் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும்முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போடலாம்.

விற்பனையும், விலை நிர்ணயமும்!

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடுவார்கள். அங்கு அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மெட்ராஸ் காயின் சொஸைட்டியில் உள்ள மூத்த நாணயம் சேகரிப்பாளர்கள் நிவர்த்தி செய்வார்கள். பின்னர் வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.

நாணயம் விற்பவர்கள் நிர்ணயிக்கும் விலையானது வாங்கும் ஆர்வலர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அவர்கள் எங்களை நாடினால், அதற்கான விலையை நிர்ணயிக்க நாங்கள் உதவுவோம். 1 அணா, 10 பைசா, 20 பைசா, குறிப்பிட்ட தலைவர்களின் உருவம் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் வெளிநாட்டு அரிய நாணயங்கள் போன்றவற்றுக்கு சந்தையில் தனியாக விலை மதிப்பிடப்படுகிறது. இந்த விலை டிமாண்ட் பொறுத்து மாறும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள நாணயங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கி நாணயம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது''.

நாணய சேகரிப்பின் பயன்கள்

இந்த நாணய சேகரிப்பால் என்ன பயன் என்றால், வகைப்படுத்தும் திறன், வரிசைப்படுத்தும் திறன், உற்றுநோக்கும் திறன், பகுத்தறியும் பண்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள முடியும். நாணய சேகரிப்பு மூலம் ஒருவரின் கவனிப்பு திறன் மேம்படுத்த முடியும். மேலும், ஒரு நாணயத்தை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் பல தகவல்களை, வரலாற்று ரீதியாக தெரிந்துகொள்ளும் பணப்பை நாணய சேகரிப்பு வழங்குகிறது. ஒரு நபரின் அறிவை பெருக்கக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பை, நாணய சேகரிப்பு செய்கிறது. எனவே, இது சாதாரண பொழுதுபோக்கு கலை என்பது மட்டுமில்லாமல், நம்முடைய வரலாற்றைப் பேணிக் காக்கக்கூடிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

போலி நாணயங்கள் உஷார்!

''வாடிக்கையாளரிடமிருந்து பழங்கால நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அந்த நாணயங்களின் தரத்திற்கேற்ப விலை தருகிறோம். இந்த நாணயங்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஆல்பம் செய்து சந்தையில் விற்றுவிடுவோம். இந்த ஆல்பங்கள் தலைவர்களின் உருவங்கள் மற்றும் பல உருவங்கள் அச்சிடப்பட்ட தொகுப்புகளாகவும், அது தயாரிக்கப்பட்ட காலம் சார்ந்தும் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவையாக இருந்தால், அவற்றின் நிலைக்கேற்ப 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய்வரை தருவோம். மன்னர் காலத்து நாணயங்கள், மேலும் சில அரிய வகை நாணயங்கள் லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடியவை.

இதைச் சாக்காக வைத்து சிலர் போலியான நாணயங்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் காட்டி மக்களை ஏமாற்றி சந்தையில் விற்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகம் நேராக இருப்பது போன்ற நாணயம் அரசால் அச்சிடப்படவேயில்லை. ஆனால், அப்படி ஒரு நாணயம் இருப்பதாகவும் அதன் விலை 20,000 ரூபாய் என்றும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் பழைய நூறு ரூபாய் நோட்டில், உலக உருண்டையில் பாம்புகள் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதுபோல போலி நோட்டுகளை அச்சிட்டு லட்சக்கணக்கில் சந்தையில் விற்கின்றனர். மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்தியன் காயின் சொஸைட்டி என்ற அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் பழங்காலத்திலிருந்து தற்போதுள்ள நாணயங்கள் வரை இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களின் எடை, அளவு, நிறம், செய்யப்பட்ட உலோகம், காலம் போன்ற குறிப்புகள் தரப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களைப் பார்த்து, வாங்கும் நாணயம் உண்மையானதுதானா எனத் தெரிந்துகொள்ளலாம்''

கவனிக்க!

பழங்கால நாணயங்களை வாங்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனிப்பது நல்லது.

1.போலியான நாணயங்கள் பாலிஷ் செய்யப்பட்டிருக்கும், எடையில் மாறுதல்கள், வடிவம் மற்றும் தர வேறுபாடுகள் இருக்குமானால் அவை போலியானவை.

2.எந்தெந்த கடைகள் உண்மையானவை என்று ஆராய்ந்தபின் நாணயங்கள் வாங்க வேண்டும்.

3.அரசு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாட்களில் பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதற்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படும். அங்கு சென்று பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். சிலர் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் நாணயங்களை விற்க முன்வருவார்கள். அவர்களிடமும் பெறலாம்.

அறிவுக்கு விருந்தாகவும், நிலையான வருமானத்தையும் தரும் இந்த நாணயம் சேகரிப்பை இனி நீங்கள்கூட செய்யலாமே!

நாணவியலும், நாணய சேகரிப்பும் - பொதுத் தகவல்

 நாணவியலும், நாணய சேகரிப்பும் - பொதுத் தகவல்

நாணயவியல்

நாணயவியல் (Numismatics) என்பது, எல்லா வகைகளிலுமான நாணயம், அதன் வரலாறு முதலியன தொடர்பான அறிவியல் சார்ந்த துறையாகும். இது பெரும்பாலும், நாணயம் பற்றிய ஆய்வு, நாணயச் சேகரிப்புப் போன்றவை தொடர்பிலேயே பரவலாக அறியப்பட்டிருந்தாலும், பணக் கொடுக்கல் வாங்கல் ஊடகங்கள் சம்பந்தமான விரிவான ஆய்வுகளையும் இத்துறை உள்ளடக்குகிறது. அமைப்பு சார்ந்த பண முறைமை இல்லாத நிலையில், பழைய காலத்திலும், சில இடங்களில் இன்றும்கூட மக்கள் பண்டமாற்று முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக, உள்ளூரில் காணப்படும், உள்ளார்ந்த பெறுமதியைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். கிர்கிஸ் மக்கள், குதிரைகளைப் பொருட்கள் வாங்குவதற்கான நாணய அலகாகப் பயன்படுத்தினார்கள். சிறிய நாணய அலகுகளுக்கு ஆட்டுத்தோல் பயன்பட்டது. ஆட்டுத்தோல் நாணவியல் ஆய்வுக்குச் சிலவேளை பயன்படக்கூடும். ஆனால், குதிரைகள் நாணயவியலில் ஆராயப்படுவதில்லை. பல விதமான பொருட்கள், நாணயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. சிப்பிகள், விலையுயர்ந்த உலோகங்கள், பெறுமதி வாய்ந்த இரத்தினக் கற்கள் என்பவை இவற்றுட் சில.

தற்காலத்தில், பெரும்பாலான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளார்ந்த, சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது கடன் பெறுமானங்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. நாணயவியல் பெறுமானம் என்பது, சட்டமுறையிலான பெறுமானத்திலும் கூடுதலாக இருக்கக்கூடிய பணப் பெறுமானம் எனலாம். இது சேகரிப்பாளர் பெறுமானம் என்றும் வழங்கப்படுவதுண்டு.

பணத்தின் பயன்பாடு மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பான ஆய்வு அதன் பௌதீக உள்ளடக்கம் தொடர்பான நாணயவியலிலிருந்து வேறுபட்டது. ஆனாலும் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை ஆகும்.

நாணயவியலின் வரலாறு

நாணயச் சேகரிப்பு, பண்டைக் காலம் முதலே இருந்து வருகின்ற ஒன்றாகும். ரோமப் பேரரசர்களும், நாணயச் சேகரிப்பாளராக இருந்திருக்கிறார்கள். இது அரசர்களின் பொழுதுபோக்கு எனவும் அழைக்கப்பட்டது. நாணயவியல், மத்தியகால இறுதியிலும், மறுமலர்ச்சிக் காலத் தொடக்கத்திலும், உச்ச நிலையில் இருந்தது. இக் காலத்தில் பண்டைக்கால நாணயங்கள் சேகரிப்பது, ஐரோப்பிய அரச குடும்பத்தவர் மத்தியிலும், பிரபுக்கள் மத்தியிலும் காணப்பட்டது. ரோமப் பேரரசர்களான அகஸ்ட்டஸ், ஜூலியஸ் போன்றோர் கிரேக்க நாணயங்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிகின்றது. மேலும், இத்தாலியக் கவிஞன் பெட்ராக் (Petrarch), ரோமப் பேரரசன் மாக்சிமிலியன், பிரான்சின் லூயிஸ் XIV, ஹென்றி IV ஆகியோர் குறிப்பிடத்தக்க நாணயச் சேகரிப்பாளர்கள் ஆவர்.

19 ஆம் நூற்றாண்டு நாடுகள் வாரியான சேகரிப்புக்களின் வளர்ச்சி, விபரப்பட்டியல்களின் வெளியீடு என்பவற்றுக்குச் சிறப்பான காலமாக இருந்தது.

வரலாற்றில் முக்கியத்துவம்

ஒரு பிரதேசத்தின் வரலாறு தொடர்பான தகவல்களைக் கண்டறிவதில் நாணயங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன[1] . நாணயத்தை ஆக்கும் உலோகம், நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு, அதனை வெளியிட்ட அரசு மற்றும் நாணயத்தில் காணப்படும் கலையம்சங்கள் போன்றவை நாணயவியலிலும் வரலாற்றுத் துறையிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துவன. உதாரனமாக நாணயத்தை ஆக்கிய உலோகத்தின் மூலம் நாணயத்தை வெளியிட்ட அரசின் பொருளாதார நிலமையைக் கண்டறிய முடியும். சந்திரகுப்தன் காலத்தில் வெளிவந்த தங்க நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார இஸ்திரத்தன்மையையும் ஸ்கந்தகுப்தனின் காலத்தில் வெளிவந்த தங்க முலாமிடப்பட்ட செப்பு நாணயங்கள் அக்காலத்தின் பொருளாதார வீழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றன.

நாணயச் சேகரிப்பு

நாணயத்தை அதன் பெறுமானம் கருதிச் சேமிக்கும் வழக்கம் நாணயம் உருவான காலத்திலேயே தோன்றிவிட்டதாகக் கருதலாம். ஆனால், நாணயச் சேகரிப்பு என்பதை ஒரு கலையாகக் கருதிச் சேகரிக்கத் தொடங்கியது பிற்காலத்திலேயே ஆகும். அரசர்களின் பொழுதுபோக்கு எனப்பட்ட நாணயச் சேகரிப்பின் புதிய வடிவம் 14 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியது. ரோமப் பேரரசர்களின் நாணயச் சேகரிப்புப் பற்றிய குறிப்புக்கள் காணப்பட்டாலும், அவர்கள் இவை பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்தனரா அல்லது வெறுமனே சேமித்து வைத்தார்களா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.

நாணயச் சேகரிப்பின் சிறப்பியல்புகள்

நாணயச் சேகரிப்பு பெரும்பாலும், நடப்பில் உள்ள நாணயங்கள் கிடைக்கும் போது சேமித்து வைப்பதுடன் தொடங்குகின்றது. இவை, வெளிநாட்டுப் பயணங்களின் பின்னர் மீந்தவையாகவோ, சுற்றோட்டத்தில் இருந்த பழைய நாணயம் ஒன்றாகவோ இருக்கக்கூடும். பொதுவாக இத்தகைய பல சந்தர்ப்பங்கள் நாணயங்கள் மீது ஆர்வத்தை உண்டாக்குகின்றன. இவ்வார்வம் காலப்போக்கில் அதிகரிக்கும்போது, வெறுமனே புதிய நாணய மாதிரிகளுக்காகக் காத்திருப்பது மட்டும் போதாது. புதுப்புது நாணயங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டியிருக்கும்.

பொதுவாக, கிடைக்கக்கூடிய எல்லா வகையான நாணயங்களிலும் சிலவற்றை மட்டும் சேகரிக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான நாணயங்களில் வெளியிடப்பட்ட எல்லாவற்றையுமே சேகரிக்க முயலலாம். முதல் வகைச் சேகரிப்பில் முழுமையான சேகரிப்பு என்பது அடைய முடியாத ஒன்று எனலாம். ஆனால், இரண்டாவது வகையில் சேகரிப்புக்காக எல்லையை வரையறை செய்வதன் மூலம் சேகரிப்பை முழுமை ஆக்குவதற்கான சாத்தியங்கள் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக, லூயிஸ் எலியாஸ்பர்க் (Louis Eliasberg) அமெரிக்க ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட எல்லா நாணயங்களையும் சேகரிப்பதில் வெற்றி பெற்றார். ஆனால், உலகில் இவர் மட்டுமே இவ்வாறான ஒரு முழுமையான சேகரிப்பைச் செய்ய முடிந்துள்ளது.

இவ்வாறு நோக்கை வரையறை செய்வதில் பல முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு நாட்டில் வெளியிடப்பட்ட முழு நாணயங்களையும் சேகரித்தல், ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலப்பகுதியைச் சேர்ந்த நாணயங்களைச் சேகரித்தல், தவறுள்ள நாணயங்களைச் சேகரித்தல், எனப் பல வழிகளில் சேகரிப்புப் பரப்பை வரையறுக்க முடியும். சேகரிப்பாளர்கள் தங்களுடைய ஆர்வம், பொருள் வசதி என்பவற்றைக் கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.

நாணயச் சேகரிப்பின் வகைகள்

நாடுசார் சேகரிப்பு

உலகில் நாணயங்களை வெளியிட்ட எல்லா நாடுகளிலிருந்தும் நாட்டுக்கு ஒன்றாக நாணயங்களைச் சேகரிக்க முடியும் சிலர் இவ்வாறான சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் சேகரிப்பைக் குறிப்பிட்ட ஒரு நாடு வெளியிட்ட எல்லா நாணயங்களையுமே சேகரிப்பது என்ற நோக்கத்துள் கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

ஆண்டுசார் சேகரிப்பு

நாணய சேகரிப்பு வகைகளில் ஆண்டுசார் சேகரிப்பு என்பது பிரபலமான ஒரு வகையாகும். ஒரு குறிப்பிட்ட நாணயத்தினை அச்சிடப்பட்ட ஆண்டுகள் வாரியாக சேகரித்து வைப்பது இவ்வகையாகும். உதாரணமாக இந்திய மூன்று பைசா நாணயம் கி.பி 1964 - 1971 வரை அச்சடப்பட்டுள்ளதுநாணய சேகரிப்பாளர் 1964 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம், 1965 இல் அச்சிடப்பட்ட 3 பைசா நாணயம் என 1971 வரை தன்னுடைய சேகரிப்பில் வைத்திருப்பார்.

அச்சக வாரியாக சேகரிப்பு

ஆண்டுசார் நாணய சேகரிப்பில் ஆண்டு வாரியாக மட்டுமல் அல்லாமல் அச்சக வாரியாகவும் நாணயத்தினை சேகரித்து வைப்பார்கள். உதாரணமாக 3 பைசா நாணயத்தினை 1964 இல் கல்கத்தா அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம், மும்பை அச்சகத்தில் வெளியிடப்பட்ட நாணயம் என ஒரே ஆண்டில் வெளியிட்டப்பட்ட அச்சகத்தின் வாரியாகவும் சேகரித்து வைத்திருப்பார்கள். ஆண்டுசார் சேகரிப்பில் இந்த வழிமுறை கடைபிடிக்கப்படுகின்றன. இந்த வகை சேகரிப்பு முறை முழுமையான சேகரிப்பு முறையாக கருதப்படுகிறது. இவற்றில் சில அச்சகத்தில் குறைந்தளவு நாணயங்களை மட்டுமே அச்சிட்டு மக்கள் புழக்கத்திற்கு விட்டிருப்பார்கள். அவ்வகை நாணயங்கள் நாணயச் சந்தையில் அதிக மதிப்புடையதாக உள்ளன.

வகைசார் சேகரிப்பு

சில நாணயங்கள் குறிப்பிட்ட ஒரு வடிவமைப்பை நீண்ட காலத்துக்கு மாறாமல் வைத்திருக்கின்றன. ஆனாலும், ஒவ்வொரு முறை மீள வெளியிடும்போதும், அதிலுள்ள தேதிகள் மட்டும் மாற்றம் அடைகின்றன. எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவின் லிங்கன் செண்ட் நாணயத்தைக் குறிப்பிடலாம். எனவே வகைசார் சேகரிப்பில் ஈடுபடுபவர்கள், குறிப்பிட்ட வடிவமைப்பில் அமைந்த, ஒரு நாணயத்தை மட்டுமே தமது சேகரிப்பில் சேர்த்துக்கொள்வர். தேதி வேறுபாடுகளையோ, வார்ப்பிடக் குறி வேறுபாடுகளையோ அவர்கள் கவனிப்பதில்லை.

புவி-அரசியல் வாரியான நாணயச் சேகரிப்பு

புவி அரசியல் வாரியான நாணயச் சேகரிப்பு ஒரு காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகள், அரசியல் காரணமாக இரண்டாகவோ, மூன்றாவோ தனித்தனி நாடுகளாக மாறியிருக்க கூடும். அவ்வாறான புவி அரசியல் சார்ந்த நாடுகளின் நாணயங்களை சேகரிப்பது இவ்வகையாகும். உதாரணமாக பிரித்தானிய பேரரசின் ஆக்கிரப்பில் இருந்த இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க நாணயங்களை நாடுகள் வாரியாக சேகரிப்பதாகும்.

இயற்கை அழகுசார் நாணயச் சேகரிப்பு

நாணயங்கள் ஈரப்பதம், வெப்பம் போன்ற காரணிகளால் காலப்போக்கில் பாதிப்படைந்து விடுகின்றன. நாணயச் சேகரிப்பாளர்களின் கவனக்குறைவு இதற்கு பெரிய காரணமாக இருந்தாலும், இயற்கையாக பாதிப்படைந்த நாணயங்களின் அழகிற்காக சில நாணயச் சேகரிப்பாளர்கள் இவ்விதமான நாணயங்களை சேகரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பிழையான நாணயங்களை சேகரித்தல்     

நாணயங்கள் சிலவற்றை அச்சிடுகையில் அச்சங்களில் பிழை ஏற்படுகிறது. இவ்வாறான பிழை நாணயங்கள் புழக்கத்திற்கு உகந்தவையாக அல்லாமல் இருப்பதால் ஒதுக்கி வைக்கப்படுகின்றன. ஆனால் நாணயச் சேகரிப்பாளர்களில் சிலர் இவ்வாறான பிழை நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

நினைவு நாணயங்கள் சேகரிப்பு

நாணயங்களை வெளியிடும் நாடுகள் தலைவர்களின் நினைவாகவோ, திட்டம், இயக்கம் போன்றவற்றின் நினைவாகவோ நாணயங்களை வெளியிடுகின்றன. இவ்வைகை நாணயங்கள் நினைவு நாணயங்கள் எனப்படுகின்றன. சில நாணயச் சேகரிப்பாளர்கள் இவ்வகை நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறான நினைவு நாணயங்கள் சேகரிப்பில் சில அரிதான நாணயங்கள் அதிக விலை மதிப்புடையவையாக சந்தையில் உள்ளன. தங்களின் நினைவு நாணயச் சேகரிப்பினை முழுமையாக நிறைவு செய்வதற்காக இந்நாணயங்களை அதிக விலை கொடுத்தும் நாணயச் சேகரிப்பாளர்கள் வாங்குகிறார்கள்.

தரம் மற்றும் மதிப்பு

நாணயச் சேகரிப்பில் நாணயங்களின் தரம் மிக முக்கியமான ஒன்றாகும். நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டு, அதில் பொறிக்கப்பட்ட தகவல்கள், உருவங்கள் ஆகியவை நன்முறையில் தெளிவாக தெரிகின்ற வகையிலும், நாணயங்கள் அச்சிடப்பட்ட பொழுது இருந்த எடையின் அளவே இருப்பதும் தரத்தினை மதிப்பிடக் கூடிய வழியாகும்.

புழக்கத்தில் விடப்படாத நாணயங்கள் (UNC) முதல் தரமானவை. இந்த நாணயங்கள் அச்சிடப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டவையாக உள்ளன. நாணயச் சேகரிப்பாளர்கள் இந்த புழக்க்த்தில் விடப்படாத நாணயங்களை பெரிதும் விரும்புகின்றனர். இந்த நாணயங்களில் அனைத்து தகவல்களும் அப்படியே இருக்கின்றன என்பதோடு கீறல்கள், தேய்மானம் ஆகியவையும் இல்லாமல் இருப்பதால் பல ஆண்டுகள் பாதுகாப்பாக சேகரித்து வைக்க ஏதுவான ஒன்றாக உள்ள.

புழக்த்தில் விடப்பட்ட நாணயங்கள் அந்நாணயங்களின் தரத்திற்கு ஏற்றவாறு, நன்நிலையில் உள்ளவை, மோசமான நிலையில் உள்ளவை என்பவையாக தரம் பிரிக்கப்படுகின்றன. இவ்வாறான தரத்தின் அடிப்படையில் நாணயத்தின் சந்தை மதிப்பு அமைகிறது.

Types of Coin Collectons-Image

Old Coins-Image