Monday 21 January 2019

சரியான முறையில், ஆரோக்கியமாக குளிப்பது எப்படி?


சரியான முறையில், ஆரோக்கியமாக குளிப்பது எப்படி?

சரியான முறையில், முறையாக, நன்றாக, சுத்தமாக, ஆரோக்கியமாக 100 % முழுமையாக குளிக்கும் முறைகள்

குளிக்கும் முறை 1

            தினமும் குளிப்பதில் கூட இவ்ளோ விஷயம் இருக்குதாம்! நீங்க தெரிஞ்சிருக்கீங்களா?

            எத்தனை தடவை குளிச்சாலும், குளிச்ச உடனே மறுபடியும் வேர்க்குதே, உடம்பு சூடும் குறையலே, அலுத்துக்கொள்வார்கள், சிலர். என்ன காரணம்? ஏன் குளித்தவுடன் வியர்க்கிறது? நாம் எதற்கு குளிக்கிறோம், என்பதை சிறிய வயதில் நமக்கு எப்படி கற்றுக்கொடுத்தார்களோ அப்படியே இன்று வரை கடைபிடிக்கிறோம், அல்லவா?

            எதற்காக குளிக்கிறோம்? உடம்பு அழுக்கு போக, அப்புறம்? உடம்பு அசதி தீர, அப்புறம், உடம்பு சூடு போக, இப்படி தான் நமக்கு கற்றுத்தந்ததை, நாம் சரியாகவே கடைபிடிக்கிறோம், ஆயினும், உடலில் குளித்தவுடன் வியர்வை வருகிறதே? உடல் சோர்வு குறையவில்லையே? நாம் எப்படி குளிக்கிறோம், எனபதைவிட, எதற்காக குளிக்கிறோம் என்பதை மனதில் வைத்தால், இந்த பாதிப்புகள் இல்லாமல் செய்யலாம் என்கின்றனர் அறிஞர்கள். உடல் உறுப்புகள் சீராக இயங்க, உடல் வெப்பநிலை, சமச்சீராக இருக்கவேண்டும், ஒரு சின்ன விஷயம் பார்ப்போமா?

           மனிதன் கண்டுபிடித்த மின்னணுக் கருவிகள், அது மருத்துவமனைகளில் உள்ள உடல் சோதனைக் கருவியாகட்டும், தொலைதொடர்பு இயக்க சாதனங்கள் ஆகட்டும், அல்லது முக்கிய தகவல்களின் சேமிப்பு கிடங்காக இருக்கும் கணிணி சர்வர் ஆகட்டும், அதற்கு அடிப்படை தேவை, சீரான அறை வெப்பநிலை, மின்னணு உபகரணங்களுக்கு அது ஏன் தேவைப்படுகிறது?

            மின்னணு உபகரணங்கள் நம் நாட்டின் வெப்பநிலை மாறுபாட்டில், அதன் இயக்கத்தில் ஏற்கெனவே உண்டாகும் சூட்டோடு, அறையின் கூடுதல் வெப்பமும் சேர்ந்து அதன் இயக்கத்தில் பழுதுகளை ஏற்படுத்திவிடும், அதனால் தொடர்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால்தான், அந்தக் கருவிகள் இயங்கும் அறைகளில் குளிர்சாதனங்களைப் பொருத்தி, சீரான வெப்பநிலையைப் பராமரிக்கின்றனர், இதனால், அவை தடையில்லா இயக்கத்தைப் பெறுகின்றன. மனிதன் கண்டுபிடித்த கருவிகளுக்கே, சூட்டைத் தணிக்க தேவை இருக்கும்போது, மனிதனுக்கு?

உடலில் சூடு ஏன் வருகிறது?

            பல்வேறு முக்கிய உறுப்புகளின் இயக்கத்தில், உடலில் சூடு ஏறிக்கொண்டே இருக்கும், ஆயினும் உடலிலேயே உள்ள இயற்கைத் தன்மைகளால், அந்தச் சூடு தானே சீராகிவிடும். ஆயினும், மாறிவரும் கலாச்சாரத்தால், உணவில் இருந்து, உறக்கம் வரை நம்முடைய இயல்பானவை எல்லாம் மாறிவிட்டன.

செரிமான சக்திக்காக

            விளைவு, உடலுக்கு அதிக செரிமான சக்தி தேவைப்படும் எண்ணையில் பொரித்த மேலைவகை உணவுகள், அதிக மசாலாக்கள் சேர்த்த அசைவ உணவுகள், துரித உணவுகள் எல்லாம் உடலில் ஆற்றலை அதிகமாக செலவுசெய்யவைப்பதோடு மட்டுமல்லாமல், உடலை அதிக சூடாக்கியும்விடுகின்றன. வழக்கமான உடல் இயக்கத்தில் உண்டாகும் சூட்டைத்தணித்துக் கொள்ளும் உடல், இதுபோன்ற செயற்கை சூட்டை சரிசெய்ய கூடுதலாக ஆற்றலை செலவிடும்போதே, நமது உடல் சூட்டை, நாம் அறியமுடிகிறது.

வியாதி

            ஒரு கட்டத்தில் தணிக்கமுடியாத இந்தச்சூடு, நிரந்தரமாக உடலில் தங்கிவிடுகிறது, இதனால்தான், பல்வேறு வியாதிகள் உடலில் புகுகின்றன. ஆக, நம் உடல்நலம், நம் உணவுப்பழக்கங்களால் கெடுகிறது, இதுபோலவே, நேரம் தவறி, உடலின் சீரண உறுப்புகள் இயல்பாக ஒய்வு எடுக்கும் நள்ளிரவு சமயத்தில், சாப்பிடும்போதும், உடல் சூடு ஏற்படுகிறது. இதனால்தான், சூட்டைப்போக்கிக்கொள்ள நாம் குளிப்பதும், ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தால்கூட, நம் உடல் சூடு தீராமல் அவதிப்படுகிறோம். இயல்பாக உறங்கி எழும் வேளையில், உடலில் வெப்பம் மிகுந்து இருக்கும், இந்த வெப்பத்தை, காலைக்கடன் முடிந்தபின்னர் கழிக்கவே, நாம் குளிக்கிறோம்.

குளியல் எப்படி இருக்க வேண்டும்?

            தற்காலங்களில் நாம் குளிக்கும் குளியலேகூட, உடல் வெப்பத்தை இன்னும் அதிகரித்துவிடுகிறது, இதற்குக் காரணம், நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, நாம் சிறு வயதில் இருந்து எப்படி பயிற்றுவிக்கப்பட்டோமோ, அப்படியே குளித்து வருகிறோம், அதுதான் சிலருக்கு இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. எப்படி?

குளிப்பதில் இருக்குது சூட்சுமம்!

            முதலில் ஒரு விஷயம், மனிதர்கள் எப்போதும் பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்கவேண்டும், இதில் விதிவிலக்குகள் என்பது, உடலுக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கும் காலங்களிலும், உடல் வாத பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே! தற்காலத்தில் ஆறுகள், ஏரிகள். குளங்கள் போன்ற நீர்நிலைகளில் மற்றும் கிணறுகளில் குளிப்பது அபூர்வமாகிவிட்டது, குளியல் எல்லாம், குறுகிய நான்கடிச் சுவர்களுக்குள் முடங்கிவிட்டது.

எப்படி குளிப்பது?

            காலையில் குளிக்கும்போது, சுடுநீரைப் பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்தவேண்டும், நீரை முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தொடை மற்றும் இடுப்பில் அதிக நீர் ஊற்றி, தண்ணீரின் அந்த வெப்பநிலையை, உடல் ஏற்க தயார்செய்யவேண்டும், மாறாக, தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்ற, திடீர் குளிரால் ஏற்படும் வெப்ப மாறுதலால், சுவாசம் பாதிக்கும் நிலை உண்டாகி, வாயால் மூச்சு விடும் நிலை ஏற்பட்டு, உடல் இயக்கம் சற்று பாதிக்கும் வாய்ப்பு உண்டாகிவிடும், மேலும், குளிக்கும்போது எப்போதும், சிறிது நீரை உச்சந்தலையில் ஊற்றிவிட்டு, அதன்பின் குளியலைத் தொடங்குதல், நலம்.

ஏன் காலிலிருந்து தொடங்க வேண்டும்?

            உடலின் தலைமைச் செயலகம், மூளையாகும், காலில் இருந்து நீரை ஊற்றி குளித்துவரும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும், மாறாக தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியேற வாய்ப்பில்லாமல், தலையில் சேர்ந்து, அதனால், உடல் சூடு அதிகரித்து விடுகிறது. இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல் சூடு தீர்வதில்லை, எனவே இதனைத் தவிர்க்க, காலில் இருந்து குளியலைத் தொடங்கவேண்டும்.

எலும்பு பலம்

            இதை, ஆற்று நீரில் குளிக்கும்போது, நாம் உணர முடியும், முதலில் நம் கால்கள் நீரில் படுகின்றன, படிப்படியாக, முழங்கால், இடுப்பு, மார்பு , முகம் பின்னர் நீரில் தலையை மூழ்கிதானே, குளிக்கிறோம். மேலும் முன்னோர் ஆற்றின் நீரோட்டத்திலேயே நீராட வேண்டும், குளிக்கும் போது, உதிக்கும் சூரியனைப் பார்த்து குளிக்க, உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் D, நேராக நம் உடலில் சேர வாய்ப்பாகும் என்பர்.

இயற்கை சோப்புகள்

            மேலும், உடல் வியர்வை பாதிப்பைப் போக்க, இரசாயனங்களால் அதிக வாசனை ஏற்றப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்த, அதில் உள்ள கெமிக்கல்ஸ் நன்கு நீர் ஊற்றி உடலை அலசாத இடங்களில் சேர்ந்து, சரும வியாதிகளை உண்டாக்கிவிடும். இதேபோல, ஷாம்பூக்களையும் தவிர்த்தல் நலம், அவற்றில் உள்ள இரசாயனங்கள் தலையை சூடாக்கிவிடுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து உபயோகித்துவர, உடலை பாதிக்கக்கூடியது. இதேபோல இயற்கை சோப்புகள் என்று வாசனை எண்ணை சேர்த்த சோப்களும், மேற்கண்ட பாதிப்புகளை அளிக்கும் என்பதால் கவனம் தேவை.

இயற்கை நார்

            முதுகை, இயற்கை நார்கள் உள்ள தேய்ப்பான்களால் நன்கு தேய்த்து குளிக்கவேண்டும், அதேபோல, இடுப்பின் முன்புறம் மற்றும் பின்புறம், கை கால்களில், நகங்களின் இடுக்குகள் இவற்றை எல்லாம் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

இயற்கை ஸ்க்ரப்

            உடலில் தேய்த்து குளிக்க இயற்கை பச்சைப்பயிறு மாவு, கடலைமாவு இவற்றை சிறிது மஞ்சள் சேர்த்து தேய்த்து குளித்து வந்தாலே போதும், உடல் அழுக்கும் நீங்கி, தொற்று பாதிப்புகளும் விலகிவிடும். இதுபோல, தலைக்கு குளிர்ச்சியூட்டும் சந்தனாதித் தைலம் அல்லது செம்பருத்தித் தைலம் தடவி குளித்துவர, உடல் சூடு தணிந்து, தலைமுடி உதிர்தல் நின்று, தலைமுடி நன்கு வளரும்.

எப்போது குளித்தல் நலம்?

            நாம் குளிப்பது, உடலை குளிர்விக்க, உடல் அழுக்கு நீக்குவது மறுபுறம், முதல் கடமை உடலின் வெப்பத்தை போக்க, உடலை குளிர்விக்க வேண்டும். அதிகாலைவேளையில் குளிப்பது, உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, மனதில் எழுச்சியையும் தரும். அதேபோல, நீச்சல்குளங்கள், தண்ணீர்த்தொட்டிகளில், குளிப்பதை தவிர்க்கவேண்டும், அழுக்குநீர் சருமத்துக்கு கெடுதல் விளைவிக்கக்கூடும். இதனால், உடலின் பித்தத்தால் உண்டான சூடு விலகி, சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

குளித்தவுடன் ஆடை அணியக் கூடாது

            குளித்தவுடன், உடனே உடைகளை அணியாமல், சற்றுநேரம் ஈரத்துண்டுடன் இருப்பது, உடலில் உயிர்காற்றை சீராகப் பரவச்செய்து, மன நலம் பாதித்தவர்களைகூட, நலம் பெற வைத்துவிடும் என்கின்றனர். இதுபோன்ற முறைகளில், அலுவலகப்பணிகளால், பயணங்களால் ஏற்பட்ட சோர்வைப்போக்க, குளித்து வர, உடனே புத்துணர்ச்சி கிட்டும், மேலும், உடல் அசதியோடு, உடல் சூடும் நீங்கிவிடும்!


குளிக்கும் முறை 2

            ஒருமனிதன் ஒரு காரியத்த சிறப்பாக செய்யவேண்டும் என்றால் அவன் மனதளவிலும், உடல் அளவிலும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். நமது உடலை புத்துணர்வு அடைய செய்ய ஆண்டவன் நமக்கு குடுத்த முறைதான் குளியல். ஒருமனிதன் குளிக்கவில்லை என்றால் அவன் உடளவில் பலவிதமான நோய்களை சந்திக்கின்றான்.

            சரி எப்படி சரியான முறையில் குளிப்பது என்பது பற்றி பாப்போம். குளிக்கும் முறையில் கூட ஒரு சில முறைகள் உள்ளது.. ஒரு சிலர் காக்கா குளியல் போட்டு உடனே வெளியில் வந்து விடுவார்கள். அது மிகவும் தவறு. குளியல் என்பது குளிர்வித்தல் என்று அர்த்தம். மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் நமது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? உடலில் அதிகமாக உள்ள வெப்பத்தை குளியல் மூலம் எப்படி வெளியேற்ற முடியும் என்பதை பார்க்கலாம் வாங்க.

            இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக்கழிவுகள் அதிகமாக தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிப்பது மிகவும் நன்று. பொதுவாகவே வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பது நன்று.

குளிக்கும் முறை

            குளியல் அறைக்குள் சென்றதும் நீரை எடுத்து அப்படியே உச்சந்தலையில் ஊற்றுவதுதான் வழக்கம். ஆனால் அது மிகவும் தவறு. முதலில் நீரை காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக.

நமது உடம்பிலிருந்து வெளியேறும்

            அதனால் தான் நம் முன்னோர்கள், குளத்தில் இறங்கும் போது ஒவ்வொரு படியாக இறங்குவது வழக்கம். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

            இதேபோன்று உச்சதலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு பின்பு குளத்தினுள் இறங்குவார்கள்.

            இதேபோன்று குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு அமர்ந்திருப்பதும் மிக நல்லது. அதே போன்று சூரிய உதயத்திற்கு முன்பு குளிப்பதும் மிகவம் நன்று. அதுவே குளிப்பதற்கு சரியான நேரமும் கூட.
            இனியாவது எந்த நேரத்தில் எப்படி குளிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு குளிப்பது நன்று.


குளிக்கும் முறை 3

            நம்மில் பலர், காக்கா குளியல் தான் குளிக்கிறோம். குளியல் அறைக்குள் செல்வார்கள் மொண்டு, மொண்டு தண்ணியை மேலே ஊற்றுவார்கள், சோப்புக் கட்டியை எடுத்து மேலும், கீழும் நாலு தேய்த்தப் பிறகு மீண்டும் தண்ணீரை மொண்டு ஊற்றிவிட்டு வந்துவிடுவார்கள்.

            உங்கள் உடலில் நீங்கள் கட்டாயம் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய இடங்கள் சில இருக்கின்றன. அங்கு தான் நமது ஆட்கள் சரியாக தேய்த்து குளிக்க மாட்டார்கள். சிலருக்கு, சோம்பேறித்தனம், சிலருக்கு அவர்களது உடல் பாகங்களை தொட்டு, தேய்த்து கழுவுவதற்கு சங்கோஜம்.

            குளிக்கும் போது முகம் கழுவுவோம், ஆனால், நிறைய பேர் காதுகளை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். இதன் காரணமாக தான் சிலருக்கு காதுகளுக்கு அருகில் கருப்பு பிடித்தது போல், கரு கரு வென்று காதுகளின் கீழ் பாகங்கள் இருக்கும் மற்றும் இதனால் சரும தொற்றுகள் ஏற்படலாம்.

            99% பேர் அவர்களது தொப்புள் பகுதியை கழுவுவதே கிடையாது என்பது தான் உண்மை. தொப்பையை சுற்றி சோப்பை சுற்றோ, சுற்றென்று சுத்துவோம். ஆனால் தொப்புள் பகுதியை சுத்தம் செய்ய மாட்டோம். உங்கள் தொப்புள் பகுதியில் மட்டுமே 2,368 வகையான பாக்டீரியாக்கள் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

            சிலர் அழுக்கு போக கை விரல்களை கழுவுவது கிடையாது. இது தான் மிக முக்கியம். கை விரல் நக இடுக்குகளில் சேரும் அழுக்கு, நீங்கள் சாப்பிடும் போது உடலுக்குள் போகும். இதனால் உங்கள் வயிற்றில் நிறைய பாக்டீரியாக்கள் சேருகின்றன.

            தொடையின் இடுக்குகளில் தான் ஓர் நாளில் நிறைய வியர்வையின் காரணமாக அழுக்கு சேருகிறது. எனவே, அவ்விடங்களில் நன்கு தேய்த்து கழுவ வேண்டியது அவசியம். குளித்தப் பிறகு அந்த இடத்தில் உடல் துடைக்கும் டவலைக் கொண்டு ஈரம் போகும் வரை நன்கு துடைக்க வேண்டும்.