Wednesday 5 September 2018


குடி கெடுக்கும் குடிநல் வழிகாட்டி

மது அருந்தினால் 27 நோய்கள் ஆல்கஹால் அலெர்ட் !

     கல்யாணம் என்றாலும் குடி, கருமாதி என்றாலும் குடி, வேலை கிடைத்தாலும் குடி, வேலை போனாலும் குடி... இப்படிக் குடித்துக் குடித்து, தமிழ்க்குடியே  பெருங்குடிகாரக் கூட்டமாகி இருக்கிறது இன்று. ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் குடித்த காலம் மலையேறிவிட்டது. ஊருக்கு உள்ளேயே கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் நடுநாயகமாக மதுக் கடைகள் வீற்றிருக்கின்றன. இதனால், டீன் ஏஜ் வயதினர் மட்டும் அல்ல, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள்கூட குடிக்கின்றனர். மது அருந்துவது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலைபோய், குடிக்கவில்லை எனில் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

     தமிழகத்தைப் பொறுத்தவரை, 60 முதல் 70 சதவிகித ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லோரையும் குடி நோயாளிகள், குடிக்கு அடிமையானவர்கள் எனச் சொல்ல முடியாது. எந்த நேரமும் குடி பற்றியே சிந்திப்பவர்கள், ஏற்கெனவே அதிகமாகக் குடித்தும், போதை ஏறவில்லை எனக் காரணம் சொல்லி, மீண்டும் மீண்டும் குடிப்பவர்கள், குடிப்பழக்கத்தால் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தால் ஓரங்கட்டப்படுபவர்களை, `குடி நோயாளிகள்என வரையறுக்க முடியும்.

     மது அருந்தினால் கல்லீரல் பாதிக்கப்படும் என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், மதுவால் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டுமே பாதிக்கப்படுவதோடு எண்ணற்ற நோய்களும் ஏற்படுகின்றன.

உடல்நலம் சார்ந்த பிரச்னைகள்      

1.   வயிற்றுப் புண்

           மது அருந்தும்போது, அதில் உள்ள நச்சுக்கள் இரைப்பையை நேரடியாகத் தாக்கிப் புண்ணாக்கும். இதனால், ஒட்டுமொத்த செரிமான மண்டலமே பாதிக்கப்படும்.

2.   கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம்

           ஒரு சிலர் மதுவை கடகடவென வேகமாகக் குடிப்பார்கள். அதிக அளவு மதுவை  மிகக் குறைந்த நேரத்தில் அருந்துபவர்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னையும், அதிக அளவு மதுவை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து அருந்துபவர்களுக்கு , கல்லீரல் சுருக்கம் (சிரோசிஸ்) பிரச்னையும் வரும். கல்லீரல் சுருக்கம் முற்றிய நிலையில், கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்படலாம்.

3.   சர்க்கரை நோய் மற்றும் கணைய அழற்சி

           ஆல்கஹால் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை அழிக்கும். இதனால், இன்சுலின் செயல்பாடு குறையும்போது, சர்க்கரை நோய் வரும். கணைய அழற்சி ஏற்படும்.

4.   ஊட்டச்சத்துக் குறைபாடு

           வைட்டமின்கள் கிரகிக்கப்படுவதை, ஆல்கஹால் தடுக்கிறது. தயமின் பற்றாக்குறை ஏற்படுவதால், மூளையில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிந்திக்கும் திறன் குறைதல், மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

           ஊட்டச்சத்துக்கள் கிரகிக்கப்படுவது, பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும், மது அருந்துபவர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இருக்காது என்பதால், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படும்.

5.   நரம்புத் தளர்ச்சி (Peripheral neuropathy)

           நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டைப் பாதித்து, கை, கால்களில் ஒருவித மதமதப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும்.

6.   தோல் நோய்கள் (Facial Erythema)

           கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையம் இருக்கும். முகம் ஆங்காங்கே சிவந்து காணப்படும். சொரியாசிஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் மது அருந்தும்போது எளிதில் சொரியாசிஸ் வந்துவிடும். சொரியாசிஸ் சிறிய அளவில் இருந்தாலும், அதனை உடல் முழுவதும் பரவச் செய்யும் ஆற்றல் மதுவுக்கு உண்டு.

7.   தசைகள் பாதிப்பு

           தசைச் சுருக்கம், தசைவலி, தசைப்பிடிப்பு போன்றவை ஏற்படும். இதனால்தான் மது அருந்துபவர்களால் ஒழுங்காக எழுந்து நடக்கக்கூட முடிவது இல்லை.

8.   உயர் ரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம்

           ஆல்கஹால் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, பக்கவாதம் வரலாம். மது, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

9.   இதய நோய்கள்

           ஆல்கஹால் இதயத் தசைகளையும் பாதிக்கும். இதனால், இதயச் செயல்திறன் பாதிக்கப்படும்.ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி எனும் இந்தப் பிரச்னையால் இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

10. ரத்தசோகை

           ஆல்கஹால் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களைக் குறைக்கும் ஆற்றல்கொண்டது. இதனால், ரத்தசோகை ஏற்படுகிறது. சிலருக்கு மயக்கம் ஏற்படும். மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

11. மூட்டு நோய் (Gout)

           ஆல்கஹால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தை அதிகரித்துவிடும். இதனால், மூட்டுகளில் ஏற்படும் பிரச்னையான கவுட் வரும். பாதத்தில், மூட்டு இணைப்புகளில் திடீரென கடுமையான வலி ஏற்படும்.

12. தொற்று நோய்கள்

           ஆல்கஹால் உடலில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் செயலிழக்கவைக்கும். இதனால், காசநோய், நிமோனியா, உடலுறவின் வழியாகப் பரவும் நோய்கள் எளிதில் தாக்க, ஆல்கஹால் முக்கியக் காரணம்.

13. புற்றுநோய்

           ஆல்கஹாலில் அசிட்டால்டிஹைடு எனும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணி இருக்கிறது. இதனால்,  உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல் புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

14. வலிப்பு நோய் (Seizer Disorder)

           மூளையில் இருக்கும் நரம்புகளில் திடீரென மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்படும். ரம் குடிப்பதால் வலிப்புப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.

மனப் பிரச்னைகள்

1.   தாம்பத்தியப் பிரச்னைகள்

           மது அருந்தும்போது உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே தூண்டப்படும். ஆனால், உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாது. தொடர்ந்து மது அருந்தும்போது, விறைப்புத்தன்மைக் குறைவு, சீக்கிரம் விந்து வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், விந்தணுக்களின் தரமும் எண்ணிக்கையும் குறையும்.

2.   மன ஊசலாட்டம் (Mood swings)

           மது அருந்துவதால் மன அழுத்தம், தவறான எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். இதனால், திடீரென பரபரப்பாகுதல், கோபப்படுதல், சோம்பலாக இருத்தல் போன்ற மன ஊசலாட்டங்கள் ஏற்படும்.

3.   தீவிர மனநோய் (Psychosis syndrome)

           ஹாலுசினேஷன் எனச் சொல்லப்படும் மனபிரமை, திடீரென ஏதாவது உருவம் கண்ணுக்குத் தெரிவது, டெலூஷன் எனப்படும் யாரோ தன்னை மறைவாகக் கவனிப்பது போன்ற உணர்வு, அடிக்க வருவது போன்ற உணர்வு, துரத்திக் கொலைசெய்ய வருவது போன்ற உணர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

4.   மனப்பதற்றம் (Anxiety)

           மனப்பதற்றம் அதிகரிக்கும். அடிக்கடி கோபம் வரும். சின்னச்சின்னப் பிரச்னைகளுக்குக்கூட எரிச்சல் அடைவார்கள். தனக்கு யாரும் இல்லையோ எனப் பதற்றம் வரும்.

5.   நடத்தைக் குறைபாடு (Conduct Disorder)

           அளவுக்கு அதிகமாக மது அருந்தும்போது  திருடுவது, பொய் சொல்வது, கடுமையான ஆயுதங்களை எடுத்து வெறித்தனமாகத் தாக்குவது,  சம்பந்தேமே இல்லாமல் தகராறில் ஈடுபடுவது போன்ற செயல்களைச் செய்வார்கள்.

6.   நினைவுஇழத்தல் (Hang Over)

           இரவில் மது குடித்துவிட்டு செய்யும் ரகளைகள், லூட்டிகள், வாக்குறுதிகள்... அனைத்தையும் மறந்துவிடுவார்கள். மறுநாள் காலை என்ன நடந்து என்றே சுத்தமாக நினைவு இருக்காது.

7.   மயக்கம் (Withdrawal symptoms)

           மது அருந்தாவிட்டால் அதீதமாகக் கை நடுங்கும். ஒரு நாள் குடிக்காவிட்டாலும் மயக்க நிலைக்குக்கூடச் சென்றுவிடுவார்கள். சிகிச்சை  தராவிட்டால், நேரடியாக கோமாவுக்குச் சென்றுவிடுவார்கள்.

சிகிச்சை என்ன?

     மது அடிமையாக்கும் ஆற்றல்கொண்டது என்பதால், மூளையை மழுங்கடித்துவிடும். மதுவில் இருந்து மீள முதலில் தன்னம்பிக்கை அவசியம். வெறுமனே மாத்திரை மருந்துகளை மட்டும்வைத்து மது அருந்துபவர்களை மீட்க முடியாது. ஒருங்கிணைந்த சிகிச்சை அவசியம். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு முதலில் கல்லீரல் எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கிறது என்பதைப் பரிசோதிக்க வேண்டும். டீடாக்ஸ் சிகிச்சைசெய்து கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை அகற்ற வேண்டும். பின்னர்,  மதுவிலிருந்து மீள்வதற்கான மாத்திரை, மருந்துகள் சாப்பிட வேண்டும். முதலில் மதுவால் பாதிக்கப்பட்டவருடன் மருத்துவர் தனியாக கவுன்சலிங் தருவார். பின்னர், அவரின் குடும்பத்தோடு சேர்த்து உட்காரவைத்து குடும்பத்துக்கு கவுன்சலிங் கொடுக்கப்படும். அதன் பின்னர் மதுவில் இருந்து மீண்டு வருபவர்களுடன் குரூப் கவுன்சலிங் கொடுக்கப்படும். இறுதியாக, மறுவாழ்வு சிகிச்சைகள் அளிக்கப்படும். மதுவில் இருந்து மீண்டுவிட்டால், மீண்டும் உடல் ஆரோக்கிய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்துவிடும். ஆர்வமும் தன்னம்பிக்கையும் இருந்தால், மது நோய்களை ஒழிப்பது எளிதே!

குடும்ப உறவு மற்றும் சமூகப் பிரச்னைகள்

1.   குடும்பத்தில் பிரச்னைகள்...

           வீட்டில் இருப்பவர்களை பட்டினியாகத் தவிக்கவிட்டு, வீட்டுச் செலவுக்குக் காசு கொடுக்காமல், தினமும் குடிப்பவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து உள்ளதால், பல வீடுகளில் தினமும் சண்டை நடக்கிறது. மது அருந்துபவர்கள் உடலுறவு மூலமாக மனைவியைத் திருப்திப்படுத்த முடிவது இல்லை. இதனால், அவர்கள் மனைவி வேறு யாராவது ஆணுடன் பேசினால்கூட, மனைவி மீது சந்தேகப்பட்டு மனைவியை அடிப்பது, குழந்தையைக் கொடுமைப்படுத்துவது போன்ற செயல்கள் பல வீடுகளில் சாதாரணமாக நடக்கிறது.

2.   குழந்தைகள் மீது வன்முறை

           ஆல்கஹால் அருந்தும்போது பாலியல் வன்முறை உணர்வுகள், குழந்தைகள் மீது வன்முறையை செலுத்துவது, குழந்தையுடன் உடலுறவு போன்ற மிக மோசமான எண்ணங்கள் தூண்டப்படுகின்றன. பெரும்பாலும், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்கள் மது அருந்திவிட்டே செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3.   வன்முறைக் குற்றங்கள்...

           பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது, குடித்துவிட்டு மனைவி, குழந்தைகள் மீது வன்முறையில் ஈடுபடுவது, ஒழுக்கக்கேடான சமூகக் குற்றங்கள் செய்வது போன்றவற்றை மது உற்சாகப்படுத்தும். மது அருந்தும்போது என்ன செய்கிறோம் என்றே ஆழ்மனதுக்குத் தெரியாது என்பதால், பலர் வேண்டுமென்றே மது அருந்திவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

குடிப்பழக்கம் உள்ளவர்களை நான்கு வகைப்படுத்த முடியும்

1. சோதனை செய்து பார்ப்பவர்கள்

           மதுவின் சுவை என்னவாக இருக்கும்... போதை என்றால் என்ன... அது எப்படி இருக்கும்... குடித்தால் நினைவு தப்புமா... இப்படியான விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆவலில் முதன் முதலாகக் குடிப்பவர்கள். 

2. முக்கிய நிகழ்வில் குடிப்பவர்கள்

           தனியாகக் குடிக்க மாட்டார்கள். ஆனால், நண்பர்களோடு சேர்ந்து சுக, துக்க நிகழ்ச்சிகள், சுற்றுலா போன்ற சமயங்களில் மட்டும் குடிப்பவர்கள்.

3. அடிக்கடி குடிப்பவர்கள்

           வாரம் மூன்று, நான்கு நாட்களாவது குடிப்பதைப் பழக்கமாக வைத்திருப்பவர்கள்.

4. அனுதினமும் குடிப்பவர்கள்

           தினமும் குடிப்பார்கள்,  ஒரே நாளில் பலமுறை குடித்துக்கொண்டே இருப்பவர்கள், குடிக்காவிட்டால் நடுக்கம் அடைபவர்கள்.

மது அருந்தும்போது என்ன நடக்கிறது?

     மதுவில் அதிக அளவில் எத்தனால் உள்ளது. இதில் இருந்து அசிட்டால்டிஹைடு உருவாகும். மது அருந்தும்போது அசிட்டால்டிஹைடு ரத்தத்தில் கலந்து, மூளையில் இருக்கும் நியூரான்களைப் பாதிக்கிறது. நியூரான்கள் வழியாகத்தான் சிக்னல்கள் செல்லும். அசிட்டால்டிஹைடு முதலான நச்சுக்கள், நியூரான்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பி, ஒரு நியூரானுக்கும் மற்றொரு நியூரானுக்கும் இடையில் தகவல் பரிமாற்றத்தைப் பாதிக்கிறது. இதனால்தான், உளறுவது, பேசுவது புரியாமல் இருப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

மதுவை மறப்போம்!

     திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

            ''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.

     அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.

     குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த  டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.

            ''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது.  குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.

இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? வழிக்காட்டுகிறார் சென்னை,  விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.

            ''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே. 

     சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும்,   நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

     உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.

     ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி. 

     குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால்,  குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!

பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...
1.    குடிக்கும் நேரம் வரும்போது, மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம், பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் மனைவி, குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
2.    ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

3.    எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்என்று திடமாகக் கூற வேண்டும். 

பெற்றோர்களின் கவனத்துக்கு...
1.    பார்ட்டி, ஃபங்ஷன் என்று நேரம் கழித்து வரும் மகனைக் கண்டிப்பாகக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். வாய் குளறுதல் மற்றும் மது வாடை வந்தால் நல்ல நிலையில் இருக்கும்போது அவருடன் பேசுங்கள்,  மதுவால் வரும் கேடுகளை எடுத்துச் சொல்லி, உங்களுடைய கனிவான கண்காணிப்பில் அவர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

2.    கூடுமானவரை பிள்ளைகளின் கையில் அதிகப் பணப்புழக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

3.    நட்பு வட்டாரத்தினால், மகன் பாதை மாறுவது தெரிந்தால், ஒரிரு வாரங்கள், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வது பலன் தரும். புதிய இடமும் மாறுபட்ட சூழலும் இதற்கு உதவியாக இருக்கும். மனம் விட்டு பேசுவதும் மகத்தான பலனைத் தரும்.

4.    வெளியூரில் படிக்கும் மகனாக இருந்தால், அடிக்கடி அவனிடம் போனில் பேசுவது, அந்த ஊரில் இருக்கும் அக்கறையுள்ள குடும்ப நண்பர்களைப் போய் பார்க்கச் சொல்வது, 'நாங்கள் உன் அருகில்தான் இருக்கிறோம்என்று அடிக்கடி அவருக்கு உணர்த்துவது... இவையெல்லாம் அவருக்குள் பெற்றோர் மீதான அன்பு கலந்த மரியாதையை ஏற்படுத்தும்; தவறான செயல்களுக்கு அடிமையாகாமல் இருக்க உதவும்.

போதை ஏறினால்... பாதை மாறினால்...

1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்...  மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளேசென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?

     அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

            ''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும்  மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

     இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது. 

     குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.

     மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.

     அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''